மியன்மாரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்யா இன மக்களுக்கு எதிரான வன்முறை காரணமாக இதுவரை 370,000 மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் தரை மற்றும் கடல் வழியைப் பயன்படுத்தி பங்களாதேஷ் - மியன்மாரின் எல்லையில் உள்ள நாப் ஆற்றின் வழியாக பங்களாதேஷில் தஞ்சமடைகின்றனர்.
இப்படி பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற 97 ரோஹிங்யர்கள் பயணத்தில் இடையில் இறந்துள்ளதாக பங்களாதேஷ் காக்ஸ் பஜார் மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி பிரவோஸ் சந்திர தார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று நாப் ஆற்றங்கரையோரம் மூன்று பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது ரோஹிங்யர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் மியன்மாரின் துப்பாக்கி சூட்டிலோ அல்லது நீரில் மூழ்கியோ இறந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் ஒரு சிலரின் உடலில் குண்டு துளைத்த காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ரோஹிங்யா ஆயுதக்கிளர்ச்சிக்குழு, காவல் மற்றும் இராணுவ அரண்களை தாக்கியதைக் காரணமாக வைத்து ரோஹிங்யா கிராமங்களில் நுழைந்த மியன்மார் இராணுவமும் புத்த பேரினவாதிகளும் ஆயிரக்கணக்கான வீடுகளை எரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த ஆயுதக்கிளர்ச்சிக்குழு அறிவித்த போர் நிறுத்த உடன்பாட்டை மியன்மார் இராணுவம் நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment