ஐ.நாவின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக வடகொரியா அதிகமான ஏற்றுமதிகளை மேற்கொண்டுள்ளதாக ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
சீனா, இலங்கை, மலேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்தது 270 மில்லியன் டொலர் மதிப்பிலான நிலக்கரி, இரும்பு மற்றும் மற்ற பொருட்களை ஐ.நாவின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக வடகொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நாவின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருட்கள், ஆயுதங்கள், ஏற்றுமதி, நிதி சார்ந்த தடைகளை மீறி வட கொரிய தலைவரான கிம் ஜோங் உன்னின் அரசு தொடர்ந்து ஏற்றுமதியில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் வடகொரியா 79 மில்லியன் டொலர் அளவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதியை சீனாவுடன் நடத்தியுள்ளது.
மட்டுமின்றி அக்டோபர் 2016 முதல் இந்த ஆண்டு மே வரையான காலகட்டத்தில் இரும்பு மற்றும் மற்ற பொருட்களை எகிப்து, சீனா, பிரான்ஸ், இந்தியா, அயர்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 4 லட்சம் டொலர் இருக்கும் என கூறப்படுகிறது.
ஐ.நா மன்றத்தின் தடையை மீறி சீனா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் வடகொரியாவுடன் வர்த்தகம் பேணி வருவதையும் குறித்த நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
யோங்பியோன் அணுசக்தி நிலையத்தில் ஆயுதங்களை தயாரிப்பது, பங்கிரி அணுசக்தி சோதனை நிலையத்தை நிறுவியது, பியோங்சானில் யுரேனியம் சுரங்கத்தை தொடங்கியது போன்ற தடை செய்யப்பட்ட அணுசக்தி சார்ந்த பணிகளிலும் வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆப்ரிக்கா, சிரியா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட பணிகளில் வட கொரியா ஈடுபடுவது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

Post a Comment