வவுனியா - மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் இரவு(10) இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில், துவிச்சக்கர வண்டியில் தனது கணவனை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு தனது மகளுடன் பயணித்த இளம் தாயொருவர் மீது திடீரென வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.
இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 26 வயதுடைய சுமன் வனஜா என்ற இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவருடன் பயணித்த இவரது மகளான ஆறு வயதுடைய கிருத்திகா படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் 16 வயதுடைய மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவரிடம், சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம், தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

Post a Comment