சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாமல் உள்நாட்டு படையினரும், ரஷிய படையினரும், அமெரிக்க கூட்டு படையினரும் திணறி வருகின்றனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில், மிடான் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் 2 தற்கொலை படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த இரட்டை குண்டுவெடிப்பால் அந்த பகுதி அதிர்ந்தது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்களும் போலீசாரும் சிக்கி அலறினர். நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.
ஆனாலும் இந்த இரட்டை குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள், போலீசார் என மொத்தம் 16 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது. பலியானவர்களில் 8 பேர் போலீசார் என அந்த அமைப்பு கூறியது.
இந்த தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி முகமது ஷார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2 பயங்கரவாதிகளில் ஒருவர், போலீஸ் நிலையத்துக்குள் நைசாக நுழைந்து, முதல் தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளார்’’ என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஹோம்ஸ் மாகாணத்தில் பாடியா பிராந்தியத்தில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் ஹெஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment