இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.
இதன் போது விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் போரின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அண்மையில் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏதாவது நீங்கள் அறிந்துள்ளீர்களா? இவற்றில் நம்பகத் தன்மை இருக்கிறதா? என்று முன்னாள் இராணுவத் தளபதியிடம் செய்தியாளர் ஒருவரால் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த முன்னாள் இராணுவத் தளபதி ´´இவற்றை நம்ப நான் தயாரில்லை. இறுதிப் போரின் போது முஸ்லிம் தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்ததற்கான எவ்வித தடயங்களும் இருக்கவில்லை. முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என நான் நினைக்கவில்லை.
முஸ்லிம் மக்களை பொதுவாக எடுத்துக் கொண்டால், இன்றும் அவ்வாறான மனநிலையில் அவர்கள் இல்லை. இதனை நான் ஏற்கமாட்டேன். விடுதலைப் புலிகள் மட்டுமே அந்நேரத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றே நான் கருதுகிறேன்.´´ என்று குறிப்பிட்டதாக சகோதர ஊடகம் ஒன்று தகவல் வெளியீட்டுள்ளது.
Post a Comment