இலங்கையை உலுக்கிய கோர விபத்து!! 10 பேர் பலி!!
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.35 அளவில் தனியார் பேருந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த, 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுள் பெண்கள் மூவரும், குழந்தைகள் மூவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிற்றூர்ந்தின் சாரதி வேககட்டுப்பாட்டை இழந்தமையே, இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment