தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரையான காலப்பகுதிக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் இமதுவ முதல் பின்னதுவ வரையான மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிய பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் வழியில் வழமையான போக்குவரத்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஹப்புத்தளை முதல் பெரகலை வரையான கொழும்பு பிரதான வீதியில் அதிக பணிமூட்டம் நிலவுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில்
75 மில்லிமீற்றர் வரையில் மழை வீழச்சி பதிவாகுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
Post a Comment