மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 150இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
7.1 மெக்னிடியூட் அளவிலான சக்தி வாய்ந்த இந் நிலநடுக்கம், நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு, மெக்சிக்கோவின் மொரெலோஸ் மற்றும் பியூப்லா ஆகிய மாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ளது.
பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதோடு, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகரின் 44 பகுதிகளில் கட்டடங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மெக்சிக்கோ நகர மேயர், மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தலைநகரில் மாத்திரம் 27 கட்டிடங்கள் முற்றாக சரிந்துள்ளதாக ஜனாதிபதி Enrique Peña Nieto தெரிவித்துள்ளார்.
கடந்த 1985ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கானவர்களை காவுகொண்ட நிலநடுக்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் மிகவும் அடர்த்தியான சனத்தொகையுடன் கூடிய நகரங்களை கொண்ட நாடுகளில் மெக்சிக்கோவும் ஒன்றாகும். நாட்டின் பெருநகர பகுதிகளில் மாத்திரம், சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
இதேவேளை, மெக்சிக்கோவில் இம்மாத இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment