ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை தூற்றி அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று(24) குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதற்கமைய, அடுத்த மாதம் 14 ஆம் திகதி அவருக்கான தண்டனை நிர்ணயிக்கப்படும் என ஹோமாகம நீதவான் உதேஷி ரணதுங்க அறிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை நேரில் பார்வையிடுவதற்காக ஞனசார தேரர் நீதிமன்றிற்கு சென்றிருந்தார்.
இதன்போது, வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து வெளியேறிய சந்தியா எக்னெலிகொடவை அவர் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பின்னர், ஹோமாகம நீதவானாக அப்போது கடமையாற்றிய ரங்க திசாநாயக்கவுக்கு இது தொடர்பில் அவர்கள் அறிவித்ததையடுத்து, சந்கேத்துக்குரியவரான ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய, உபத்திரவப்படுத்தல் மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று குறித்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் ஞானசார தேரர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, தண்டனை நிர்ணயிப்பதை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் உதேஷி ரணதுங்க, ஞானசார தேரரை முன்பிணையில் செல்ல அனுமதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment