கண்டி வத்தேகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடவளை பகுதியில் வைத்து, பிரபல பாதாள உலக தலைவன் மாகந் துரே மதூஷின் சகாக்களான பைலா மற்றும் ஜனா ஆகியோர் அதிரடிப் படைமினரால் கடந்த சனிக்கிழமை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கிடைக்க பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்ய முற்பட்ட போது காரில் இருந்து பைலாவும், ஜனாவும் அதிரடிப் படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும், பதில் தாக்குதலில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்ட தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் பைலாவால் கண்டி பகுதியில் பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல மத்திய நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நிலையமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அந்த மத்திய நிலையத்துக்கு கொழும்பில் இருந்தும் பல பாதாள உலக உறுப்பினர்கள் வந்து சென்றுள்ளமை தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர பொலிஸ் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதுடன் அதன்போது குறித்த சம்பவம் தொடர்பிலான முழுமையான விட யங்களை வெளிப்படுத்தினார்,
பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்த நிறுவப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பாதாள உலக ஒழிப்பு பிரிவுக்கு, மடவளை பகுதியில் இரு பாதாள உலக உறுப்பினர்களின் நடமாட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மடவளை பகுதியில் அதிரடிப் படையினர் கடந்த சனிக்கிழமை நண்பகல் துரித வீதி சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது நண்பகல் 12.15 மணிக்கு அப்பகுதி ஊடாக வந்த சொகுசு கார் ஒன்றினை அதிரடிப் படையினர் சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். இதன்போது அக்காரில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
பதில் தாக்குதல் அதிரடிப் படையி னரால் நடத்தப்பட்டுள்ள நிலையில் காரில் இருந்த பைலாவும், ஜனாவும் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக கட்டுகஸ்தோட்டை ஆரம்ப வைத்தியசாலைக்கு அதிரடிப்படை ஜீப் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட போதும் இடை வழியில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பைலா எனும் 30 வயதான ருமல்ஷ இரேஷ் மதுஷங் கனவகமுவ என்பவர் பிரபல பாதாள உலக தலைவர் மாகந்துரே மதூஷ் மற்றும் அங்கொட லொக்கா ஆகியோரின் பிரபல சகா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுவலை ரணால, அத்துருகிரிய, ஹோமாகம், பகுதிகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கப்பம் பெறும் நடவடிக்கை உள்ளிட்ட குற்றங்களுடன் பைலாவுக்கு தொடர்புள்ளதாகவும் அது தொடர்பில் நுகேகொடை, ஹோமாகம் உள்ளிட்ட நீதி மன்றங்களில் அவருக்கு எதிராக 15 வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மதூஷின் இந்நாட்டு போதைப்பொருள் வர்த்தகம், கப்பம் பெறும் நடவடிக் கையை பைலாவே முன்னின்று நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கொல்லப்பட்ட மற்றைய சந்தேக நபரான பொல்வத்தகே உபாலி அல்லது ஜனா எனும் அங்கொடையை சேர்ந்த பாதாள உலக உறுப்பினருக்கு எதிராகவும் பல வழக்குகள் உள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தின் போது பைலாவும், ஜனாவும் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, ரிவோல்வர் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
அத்துடன், பாதாள உலகக் கோஷ்டியினரைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல்வேறு தரப்புக்கள் ஊடாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட பலரைக் கைது செய்ய முடிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment