போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நாட்டில் மீண்டும் தூக்குத் தண்டனையை செயற்படுத்த நேற்று (10) கூடிய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் ஒருவரை நிலையாக நிற்க வைத்து கொலை செய்தல், தலையைத் துண்டித்து கொலை செய்தல், தண்ணீரில் அமிழ்த்து கொலை செய்தல் உட்பட மரண தண்டனை முறைமைகள் காணப்பட்ட போதிலும், முதல் முறையாக ஒருவரை தூக்கில் தொங்க வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 1812 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 10 ஆம் திகதியே ஆகும்.
இலங்கையில் கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில் போட்டது 1976 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆகும். அன்று முதல் கடந்த 42 வருடங்களாக தூக்குத் தண்டனை நாட்டில் அமுலில் இருக்க வில்லை.
நாட்டுச் சட்டத்தின் படி, அரசுக்கு எதிராக சதி செய்தல், இராணுவ கிளர்ச்சி செய்தல், போதைப் பொருள் வியாபாரம், கொலை செய்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment